Tamil Nadu VIPs family members winning local body elections : தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றது. அதன் தேர்தல் முடிவுகள் நேற்று காலையில் இருந்து வெளியாகி வருகிறது. இன்னும் இறுதி செய்யப்பட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. முன்னிலை நிலவரங்கள் மட்டும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் வெற்றியார்கள் அறிவிக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டின் வி.ஐ.பி வீடுகளில் இருந்து போட்டியிட்ட வேட்பாளர்களின் நிலை என்ன? எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள்? எத்தனை பேர் தோல்வியை தழுவினார்கள் என்பதை நீங்கள் இந்த கட்டுரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
பா.ரஞ்சித்தின் சகோதரர் வெற்றி
வில்லிவாக்கம் ஒன்றியத்தின் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அன்வர் ராஜா மகள் தோல்வி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் 2வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார் அதிமுகவின் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதபியா. அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி போட்டியிட்டார். மொத்தம் பதிவான வாக்குகளில் ராவியத்துல் அதபியா 1062 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளார் சுப்புலெட்சுமி 2405 வாக்குகள் பெற்றார். மண்டபம் ஒன்றியத்தின் திமுக செயலாளர் ஜீவானந்தத்தின் மனைவி தான் சுப்புலெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா மகள் தோல்வி - அதிமுகவினர் அதிர்ச்சி
அதிமுக எம்.எல்.ஏவின் கணவர் தோல்வி
திருச்சி மணச்சநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ அதிமுகவை சேர்ந்த பரமேஸ்வரி ஆவார். அவருடைய கணவர் முருகன் மணச்சநல்லூர் ஒன்றியம் 4வது வார்டில் வேட்பாளாராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஸ்ரீதர் என்பவர் போட்டியிட்டார். 1307 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீதரிடம் தோல்வியை தழுவினார் முருகன்.
எம்.எல்.ஏ ஆறுகுட்டி மகள் வெற்றி
கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டியின் மகள் அபிநயா வெற்றி பெற்றுள்ளார்.
தொல். திருமாவளவனின் தம்பி மனைவி வெற்றி
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியம், சன்னாசிநல்லூர் வார்டு எண் 1-ல் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் தம்பி மனைவி செல்வி செங்குட்டுவன் போட்டியிட்டார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 1362 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியை கைப்பற்றினார் செல்வி செங்குட்டுவன்.