Political Observers Say About Vk Sasikala : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற விகே சசிகலா கடந்த ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் தங்கி மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வந்த அவர், இன்று (பிப்ரவரி 8)சென்னை திரும்புவார் என கூறப்பட்டது. இதன்படி இன்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா தற்போது தமிழக எல்லையை கடந்த சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்.
2031-வரை வாய்ப்பில்லை : சசிகலா எதிர்கொள்ளும் தேர்தல் சிக்கல்
இவரின் வருகை தமிழக அரசியலை புரட்டிபோடும் அளவுக்கு மாற்றம் இருக்கும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சசிகலா சிறை செல்வதற்கு முன் அதிமுகவில் பொதுச்செயலாளராக பதவியேற்று அடுத்ததாக முதல்வர் பதவிக்கும் குறி வைத்து காய் நகர்த்தினார். ஆனால் அதற்குள் அவர் சிறைசெல்ல வேண்டி இருந்ததால், அவரது உண்மையான விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் அமரவைத்துவிட்டு சிறைக்கு சென்றார்.
ஆனால் சசிகலா முதல்வராக வேண்டி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், தர்மயுத்தம் என்ற பெயரில், ஜெயலலிதா நினைவிடத்தில், போராட்டம் செய்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதன்பிறகு அதிரடி மாற்றங்களை சந்தித்த அதிமுக, கட்சியில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டது.
பிரேம் சிங் தமாங் பெற்ற சலுகை சசிகலாவுக்கு பொருந்துமா?
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா பொதுச்செயலாளர் இல்லாமல் பொதுக்குழு கூட்டியது செல்லாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், சசிகலா தற்போது சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வரவுள்ளதால், அடுத்து அவர் அதிமுகவை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டுவார் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் உள்ள அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள் சசிகலாவுக்கு எதிராக சில தந்திரங்களை செய்து வருகின்றனர்.
அவர் விடுதலையான அன்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், நினைவிடம் மற்றும், நினைவு இல்லம் திறந்தது, சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தது, அவர் கொடியை பயன்படுத்தற்காக நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்தது, அவர் சென்னை திரும்பி வரும்போது, ஜெயலலிதாவின் நினைவு இல்லம் மற்றும், நினைவிடம் அறியவற்றை மூடியது, தற்போது சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என பல உதாரணங்களை கூறலாம்.
ஆரத்தி.. ஜல்லிக்கட்டு காளை.. செண்டா மேளம்... வெல்கம் பேக் டூ சென்னை சசிகலா
ஆனால் அதிமுக தரப்பில் இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும், சசிகலா இன்னும் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். இதனால் அவர் சென்னை வந்ததும் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில், சசிகலா தமிழகம் திரும்பியது தொடர்பாக பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விதித்த தடையையும் மீறி சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதில் தாக் அவரது லீடர்ஷிப் (தலைமை பண்பு) உள்ளது. தினகரனின் அமமுக அதிமுகவின் பிளவு என்பதை இபிஎஸ், ஓபிஎஸ் விரும்பவில்லை. அமமுகவை வளர்ப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் அமமுக அதிமுகவின் பிளவு என்று கூறும்போது வாக்கு வங்கி பாதிக்கும் என்பதால் அதிமுக அச்சப்படுவதாகவும், இதனால் தான் அதிமுக அமமுக வேறு வேறு என்றும், சசிகலா அதிமுக பெயரை பயன்படுத்த கூடாது என இபிஎஸ் ஓபிஸ் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
சசிகலா வைத்த ட்விஸ்ட் : அதிமுக உறுப்பினர் காரில் கொடி கட்டி பயணம்
மேலும் எங்களுக்கும் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இளவரசி சுதாகரன் ஆகியோரின் சொத்தக்களை முடக்கியுள்ளது. தமிழக அரசின் இந்த இந்த செயல் அமமுக அதிமுக இணையும் என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன், “சசிகலா மிகுந்த நம்பிக்கையோடு எடப்பாடியிடம் ஆட்சி - கட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஆனால் நான்காண்டுகள் கழித்துஒரு பெண்மணி வரும் நேரத்தில் ஆட்சி அதிகாரம் கட்சி ஆதிக்கம் அனைத்தையும் காட்டி கட்டுப்பாடுகளையும் காவல்துறை மூலம் கட்டளைகளையும் நிறைவேற்றிக் கட்டுக்கடங்காத துரோகத்தைச் செய்தது மன்னிக்கவே முடியாது என்பது என் கருத்து. துரோகத்தின் எல்லை நீள்கிறது. சசிகலாவுக்கு முன் நேருக்கு நேர் நின்று பேசும் துணிவில்லாத தர்மத்துக்கு யுத்தம் செய்த துச்சாதனக் கூட்டத்தின் துரோகத்துக்கு முடிவு விரைவில் அமையும். காலம் வலியது” எனக் கூறியுள்ளார்.
சசிகலாவை சந்திக்கும் வி.ஐ.பி.கள்... பதற்றத்தில் அதிமுக ?
அரசியல் விமர்சகர் ராதாகிருஷ்ணன், இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு, அண்ணாவின் பேச்சாற்றலோ, கருணாநிதியின் கருணாநிதியின் ஆற்றலோ, பெரியாரின் எளிமையோ, ஜெயலலிதாவின் ஆளுமையே இல்லை. காலம் மாறிவிட்டது கட்சியில் இருக்கும் நபர்களும் மாறிவிட்டார்கள். கட்சியில் இருந்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்றே பலர் யோசிக்கின்றனர். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் யாரும் கட்சியின் கொள்கைகளை பற்றி சிந்திப்பதில்லை. இந்த காலகட்டத்தில் சசிகலாவுக்கு அரசியல் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவே பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.