Corona Virus : சென்னை விமான நிலையத்தில் சீனாவில் இருந்து வந்த 1150 பேர் உட்பட 7000 நபர்களுக்கு நேற்று (ஜன.3) வரை கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது.
Advertisment
முறைப்படி அனைவருக்கும் சோதனை நடைபெற்றது. இரத்த மாதிரி சோதனை எடுக்கப்பட்டவர்களும், எடுக்கப்படாதவர்களும் என அனைவரும் அடுத்த 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் இதுவரை 10 பேர் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 1,150 நபர்களில்,
சென்னையைச் சேர்ந்தவர்கள் - 319
கோவைச் சேர்ந்தவர்கள் - 72
மதுரையைச் சேர்ந்தவர்கள் - 38
திருச்சியைச் சேர்ந்தவர்கள் - 50
அடங்குவர்.
வுஹான் நகரில் இருந்து வந்தவர்களுக்கு இரத்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சளி, காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு இருந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்திரியம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் அசோக்குமார்( 33). சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 31ம் தேதி சென்னை விமான நிலையம் வழியாக ஊர் திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு சளி தொந்தரவு காரணமாக அருகே உள்ள ராயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு சோதனை செய்து பார்த்த பின் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மேல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை தனி வார்டில் அனுமதித்த மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று இவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள சோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முககவசம் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.