Karunanidhi Health News Today Live, Kalaignar Karunanidhi, Karunanidhi Live, M Karunanidhi LIVE, Karunanidhi Latest News, Karunanidhi News in Tamil, கருணாநிதி உடல்நிலை
Karunanidhi Health: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10-வது நாளான ஆகஸ்ட் 6-ம் தேதி கருணாநிதியின் உடல்நிலை அனைவரையும் பதற வைத்தது. தயாளு அம்மாள் உள்பட மொத்த குடும்பத்தினரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை விட்டது.
திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 2016 இறுதியில் இருந்து உடல்நலம் குன்றியிருக்கிறார். அவருக்கு தொண்டையில் செய்யப்பட்ட டிரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சையை தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.
அண்மையில் தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை மாற்றியதை தொடர்ந்து, நோய்த் தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது. பிறகு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சையில் உடல்நலம் தேறிய கருணாநிதி, திடீரென ஒருநாள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை எதுவும் வெளியிடப்படவும் இல்லை.
இந்நிலையில் கருணாநிதிக்கு கல்லீரல் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதனால் அவரது உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்திக்கிறது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கவில்லை.
எனினும் திமுக முக்கிய நிர்வாகிகள் மூலமாகவே இந்தத் தகவல் கட்சி நிர்வாகிகளிடம் பரவியிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் பலரும் இதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்தபடி இருக்கிறார்கள்.
DMK Chief Kalaignar Karunanidhi Health: கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட தயாளு அம்மாள்.
Kalaignar Karunanidhi Health News , கருணாநிதி உடல்நிலை:
11:30 PM : வீட்டுக்கு சென்ற கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகியோர் மீண்டும் மருத்துவமனை வந்தனர். கருணாநிதி உடல் நிலை திருப்திகரமாக இல்லாததால் அவர்கள் திரும்பியதாக கூறப்பட்டது.
10:40 PM : மு.க.ஸ்டாலினை தொடர்ந்து கனிமொழி கிளம்பிச் சென்றார். தொண்டர்கள் தொடர்ந்து கருணாநிதியை வாழ்த்தி கோஷமிட்டபடியே இருந்தனர்.
10:30 PM: காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திற்கு கிளம்பிச் சென்றார். அவருடன் அதே காரில் உதயநிதியும் சென்றார். மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசவில்லை. எனினும் தொண்டர்கள் கூட்டம் தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன்பு கோஷம் போட்டபடியே நின்றது.
10:00 PM : மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மருத்துவமனை வந்து நலம் விசாரித்தனர்.
9:45 PM: டெல்லியில் இருந்து திமுக எம்பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
திமுக எம்எல்ஏ.க்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனை வந்தனர்.
9:40 PM: கருணாநிதியின் உடல்நிலை பற்றி அறிந்து தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளதால், காவேரி மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
09:10 PM: கருணாநிதி தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவரது ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. தொண்டர்கள் தொடர்ந்து, ‘வா. வா தலைவா! அறிவாலயம் போகலாம் தலைவா!’ என கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
08:42 PM: கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
08: 25 PM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மருத்துவமனைக்கு முன்பாக குவிந்த தொண்டர்கள் ‘எழுந்து வா தலைவா’ என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்பாக அங்கு குவிந்து வருகிறார்கள்.
கருணாநிதி நலம்பெற வேண்டி காவேரி மருத்துவமனையில் காத்திருக்கும் தொண்டர்கள்
08: 10 PM: கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க, சென்னை வந்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.
07:50 PM: கருணாநிதி உடல்நிலை குறித்து இதுவரை தேமுதிக கட்சியில் இருந்து யாரும் நேரில் விசாரிக்காத நிலையில், முதன்முறையாக அக்கட்சியின் எல்.கே.சுதீஷ் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
07: 40 PM: வயதின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுகிறது; அவர் போராடி வென்று மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது – ஜெ.அன்பழகன் எம்எல்ஏ பேட்டி
07: 20 PM: திமுக தொண்டர்கள், அதிகளவில் மருத்துவமனையை நோக்கி விரைவதால், சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
07:10 PM: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, க.அன்பழகன், வைரமுத்து ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மேலும், கி.வீரமணியும் அங்கு வந்துள்ளார்.
காவேரி மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருக்கும் தொண்டர்கள்
07:00 PM: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்ற அறிக்கை வெளியான பிறகு, காவேரி மருத்துவமனை வளாகத்தில் எண்ணற்ற திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
06:30 PM: காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் ஒத்துழைப்பதை பொறுத்தே எதையும் கணிக்க முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
6:10 PM: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தபோது அவர்கள் கருணாநிதியை பார்த்த புகைப்படத்தை திமுக வெளியிட்டது. ஆனால் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்த்த புகைப்படத்தை வெளியிடவில்லை. இதுவும் கருணாநிதி உடல்நிலை மோசமானதை உறுதி செய்வதாக திமுக நிர்வாகிகள் தரப்பிலேயே பேசப்பட்டது.
6:00 PM : கருணாநிதி உடல்நிலை மோசமாகியிருப்பதாக காலையில் இருந்து தகவல்கள் வெளியானாலும், மாலை 6 மணி வரை காவேரி மருத்துவமனை அதை உறுதிப்படுத்தவில்லை. காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தனது பேட்டியில், உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா உள்பட திமுக.வில் இருந்து யாரும் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
05:35 PM: மு.க.ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
5:20 PM: கருணாநிதி உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளியாகியிருப்பதால் இன்று காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4:30 PM: கருணாநிதி உடல்நிலை பின்னடைவு குறித்து தகவல்கள் வெளியானதால் காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.
3:30 PM: கருணாநிதி உடல்நிலை மோசமான தகவல் கிடைத்து வெளியூர் திமுக நிர்வாகிகள் பலரும் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை வருகிறார்கள். நேற்று மாலையே சென்னையில் இருந்து ஊருக்கு செல்வதாக இருந்த சில நிர்வாகிகள் அந்த பயணத்தை ரத்து செய்தனர்.
2:40 PM: கருணாநிதியை பார்க்க அவரது மனைவி தயாளு அம்மாள் அழைத்து வரப்பட்டதை கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சற்றே கவலையுடன் பார்ப்பதை உணர முடிந்தது. கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவே தயாளுவை அழைத்து வர காரணம் என்கிறார்கள்.
1:40 PM: ‘திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார்’ என காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் புறப்பட்ட போது மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
01.28 PM: காவேரி மருத்துவமனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்த போது, “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார்; அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன்” என்றார்.
1:15 PM: கருணாநிதியை பார்க்க அவர் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். கடந்த 10 நாட்களாக சிகிச்சையில் இருக்கும் கருணாநிதியை பார்க்க, தயாளு அம்மாள் இன்று முதல்முறையாக வந்துள்ளார். அவருடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர் .
1:00 PM: கருணாநிதி உடல்நிலை பின்னடைவை சந்தித்து வருவதால் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அவர்களது குடும்பத்தினர் காலை முதல் மருத்துவமனையில் இருக்கிறார்கள். தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இணை ஆணையர் அன்பு, மைலாப்பூர் துணை ஆணையர் மயில் வாகனன் ஆகியோர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
12:45 PM: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது ரேலா. இவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் படித்தவர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். தற்போது, சென்னை குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் நோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் தலைவராக உள்ளார்.
பல்வேறு நாடுகளில் சுமார் 4 ஆயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளையும், தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார். கடந்த 1997-ல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த, பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அந்தப் பெண் தற்போது சட்டப் படிப்பு படித்து வருகிறார்.
12:30 PM: டாக்டர் முகமது ரேலா, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு நெருக்கமானவர்! நேற்று சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஜெகத்ரட்சகனுடன் அவர் கலந்து கொண்டார். ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில் அவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
12:00 AM: கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு தென்படுவதாகவும், கல்லீரல் சிகிச்சையில் பிரபலமான நிபுணர் முகமது ரேலா மூலமாக சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் மருத்துவமனை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் அறிக்கையில்தான் இதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும்.
11:30 AM: காவேரி மருத்துவமனையில் கருணாநிதி 10-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நலம் விசாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று (ஆகஸ்ட் 6) இரவு 8 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.